அருட்சகோதரி மேரி கென்னத் கெல்லர் (1914?–1985) கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார். 1965ஆம் ஆண்டு விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் "Inductive Inference on Computer Generated Patterns." என்னும் தலைப்பின் கீழ் செய்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.
அன்பின் சகோதரிகள் என்னும் கத்தோலிக்கத் துறவற சபையில் இணைந்து 1940ஆம் ஆண்டு தனது துறவற வாக்குறுதியினை அளித்தார். அதன் பின்னர் கணித அறிவியலில் இளங்கலையும் (B.S. in Mathematics), மேலும் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுகலையும் (M.S. in Mathematics and Physics) தேபால் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். டார்த்மவுன்ட் கல்லூரியில் பயிலும் போது, அக்காலத்தில் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாகக் கருதப்பட்ட, கணினித் துறையில் பேசிக் நிரலாக்க மொழியினை உருவாக்க ஊதவினார்.
1965ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், ஐயோவா கிளார்க் கல்லூரியில் கணினி அறிவியல் துறையினை நிறுவி அதன் இயக்குநராக இருபது ஆண்டுகளுக்குப் பதவி வகித்தார். இந்த கிளார்க் கல்லூரியில் இப்போது கெல்லர் கணினி மையம் மற்றும் தகவல் சேவை மையம், இவர் பெயரால் நிறுவப்பட்டு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பயிர்ச்சி அளிக்கின்றது. இக்கல்லூரியில் இவரின் பெயர் கொண்டு, "Mary Kenneth Keller Computer Science Scholarship" கல்வி ஊக்கத்தொகை மாணாக்கருக்கு வழங்கப்படுகின்றது.
கணினி அறிவியல் பற்றி இவர் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.