கிறிஸ்டியன் டாப்ளர் Christian Doppler | |
---|---|
பிறப்பு | சால்ஸ்புர்க், ஆஸ்திரியா | 29 நவம்பர் 1803
இறப்பு | 17 மார்ச்சு 1853 வெனிசு, இத்தாலி | (அகவை 49)
தேசியம் | ஆஸ்திரியர் |
பணியிடங்கள் | பிராகா பாலிடெக்னிக் வியென்னா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | டாப்ளர் விளைவு |
கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler, நவம்பர் 29, 1803 - மார்ச் 17, 1853) ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் ஆவார் 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்தார். ஒலிமூலம் இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து திசைவேகம் மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
கிறிஸ்டியன் டாப்ளர் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் வியன்னா மற்றும் சல்ஸ்பெர்கில் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்று முடித்தார். பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்) பணியாற்றினார்.
டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை 1845 -ல் டாப்ளர் விளைவைக் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் செக்கோசுலவாக்கியாவில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது கணிதம், இயற்பியல், இயந்திரவியல் மற்றும் வானியல் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். 1848-ல் வியன்னாவுக்கு குடிபெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். மரபியலின் தந்தை எனப்படும் கிரிகொர் மென்டல் வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்.
டாப்ளரின் முழுப்பெயரில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. டாப்ளர் தனது பெயரை கிறிஸ்டியன் டாப்ளர் எனக் கூறிக்கொண்டார். அவருடைய பிறப்பு ஆவணங்கள் அவரை கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர் எனக் குறிப்பிடுகின்றன. வானியல் அறிஞரான ஜூலியஸ் சைனர் இவர் பெயரை ஜோகான் கிறிஸ்டியன் டாப்ளர் எனத் தவறுதலாக அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இவருடைய பெயரைப் பலர் அவ்வாறே தொடருகின்றனர்.
ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள பொது ஒலிகள் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் எற்படும் நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.