சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் | |
---|---|
ஃபிளெமிங் (நடுவில்) சுவீடிஷ் அரசர் குஸ்தப் (V) வழங்கும் நோபெல் பரிசினைப்பெற்றுக்கொள்கிறார் (வலது), 1945 | |
பிறப்பு | ஸ்காட்லாந்து | 6 ஆகத்து 1881
இறப்பு | 11 மார்ச்சு 1955 லண்டன், இங்கிலாந்து | (அகவை 73)
குடியுரிமை | ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | ஸ்காட்டிஷ் |
துறை | நுண்ணுயிரியல்:நுண்மவியல், எதிர்ப்பியல் |
பணியிடங்கள் | புனிதர் மேரி மருத்துவமனை, லண்டன் |
அறியப்படுவது | பெனிசிலின் கண்டுபிடிப்பு |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1945) |
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.
உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.
ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது.
தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.
படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.
நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.
பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார்.
1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)